டோணியை கட்டிப்பிடித்த மாணவி
கொல்கத்தா:கொல்கத்தா கிரிக்கெட் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோணியை கல்லூரி மாணவி ஒருவர் கட்டிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொல்கத்தாவில் பயற்சி முகாம் நடந்தது. நேற்றுடன் பயிற்சி முடிந்தது. பயிற்சி முடிந்து மாலையில் வீரர்கள் தங்களது ஹோட்டலுக்குக் கிளம்பினர்.அப்போது ஒரு இளம்பெண் பேருந்தை நோக்கி ஓடி வந்தார். டோணி ஆட்டோகிராப் ப்ளீஸ் என்று கத்தியபடி அவர் வந்ததால் டோணி பேருந்திலிருந்து இறங்கி அவருக்கு ஆட்டோகிராப் போட்டார்.
அப்போது அந்த ரசிகை திடீரென உணர்ச்சிவசப்பட்டவராக டோணியை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டார். இதை எதிர்பாராத டோணி தர்மசங்கடத்தில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பெண்ணின் பிடியிலிருந்து விடுபட டோணி முயன்றார். ஆனால் அப்பெண்ணோ இறுக்கத்தை அதிகரித்தாரே தவிர விடவில்லை. இதையடுத்து ஓடி வந்த காவலர்கள் அப்பெண்ணை டோணியிடமிருந்து பிரித்து விடுவித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ஹசீனா நஸ் ரீன் என்பதும் பெர்காம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி என்பதும் தெரிய வந்தது. டோணியின் தீவிர ரசிகையான இவர் அவரை சந்திக்க தீவிரமாக முயன்றுள்ளார்.
அந்த வாய்ப்பு கிடைத்தபோதுதான் உற்சாகத்தில் தன்னை மறந்து டோணியைக் கட்டிப் பிடித்து பரவசம் அடைந்துள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கடுமையாக எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.