கிருஷ்ணா கால்வாய்: பாபாவுக்கு கருணாநிதி நன்றி
சென்னை: சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப் பயன்படும் கிருஷ்ணா நீர்க் கால்வாயை சீரமைக்க நிதியுதவி செய்த சத்ய சாய்பாபா அறக்கட்டளைக்கு முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆந்திர அரசுடன் தமிழக அரசு கிருஷ்ணா நிதி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக கடந்த 1983ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் படி சென்னைக்கு அருகே உள்ள பூண்டி நீர்த் தேக்கம் வரைக்கும் கால்வாய் அமைக்கப்பட்டது.
இந்தக் கால்வாயில் ஆந்திராவின் கண்டலேறு என்ற இடத்திலிருந்து பூண்டி வரையிலான பகுதி சீரின்றி பழுதாகிக் கிடந்தது. இதை சீரமைக்க உதவுவதாக சாய்பாபா முன்வந்தார். இதையடுத்து 150 கி.மீட்டர் கால்வாயை சீரமைக்க ரூ.200 கோடி ரூபாய் நிதியை சத்யசாய் அறக்கட்டளை மூலம் சாய்பாபா ஒதுக்கினார்.
இதையடுத்து இப்பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தது. இதற்காக சென்னைக்கு சாய்பாபாவை அழைத்து முதல்வர் கருணாநிதி தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரையிலான கால்வாயை சீரமைக்க உதவுவதாக சாய்பாபா அறிவித்துள்ளார். இதற்கு முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக கால்வாயை மேம்படுத்துவதற்கு சத்யசாய் அறக்கட்டளை உதவிட முன்வந்ததற்கு தமிழக அரசின் சார்பாகவும், சென்னை வாழ் மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்.
பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து உதவிடுவார் என்று தனது கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.