வீட்டிலிருந்தபடியே பஸ்ஸை பாலோ செய்யலாம்
சென்னை:சென்னை நகரில் ஓடும் அரசுப் பேருந்துகள் எந்த இடத்தில் வந்து கொண்டுள்ளது என்பதை வீட்டிலிருந்தபடியே அறிந்து கொள்ளும் நவீன வசதியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வாகனங்களின் நடமாட்டத்தை செயற்கைக்கோள் மூலம் அறியும் வசதி பல தனியார் வாகனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சரக்கு லாரிகள், தனியார் பேருந்துகளில் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி சென்னை மாநகரப் பேருந்துகளில் அமல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் ரூ.3 கோடி நிதியுதவியுடன் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 2000 பேருந்துகளில் இது அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி அனைத்துப் பேருந்துகளிலும் சென்சார் கருவிகள் பொருத்தப்படும். பின்னர் இவை செயற்கைக்கோள் மூலமாக போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்ப்யூட்டர்கள் மூலம் கண்காணிக்க முடியும். மேலும் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநருடன் பேசுவதற்கான வசதியும் இதில் உள்ளது.
பேருந்துகளின் நடமாட்டம் குறித்த தகவல்கள் இணையதளத்திலும் இடம் பெறச் செய்யப்படும். அதன் மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்தே தாங்கள் போக வேண்டிய பேருந்து தற்போது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியும். அதை வைத்து தங்களது பயண நேரத்தை திட்டமிட முடியும்.