காவிரி-கூடுதல் நீதிபதிகள் விசாரிப்பார்கள்- உச்சநீதிமன்றம்
டெல்லி:காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை குறித்து கூடுதல் நீதிபதிகள் விசாரணை நடத்துவர்கள் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வெளியிட்டது. அதன் படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆண்டுக்கு 419 டிஎம்சி தண்ணீரை கர்நாடக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கர்நாடகத்திற்கு 270 டிஎம்சியும், கேரளத்திற்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் கூறியது.
இந்த தீர்ப்புக்கு கர்நாடக விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடகத்தில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து நடுவர் மன்றத் தீர்ப்பை புறக்கணிப்பதாக கர்நாடக அரசு அறிவித்தது.
இதற்கிடையே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய 90 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள பல்வேறு விவசா. அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் சார்பிலும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மாத இறுதியில் காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தது.
அதில் காவிரியில் தமிழகத்தின் பங்காக மேலும் 60 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட வேண்டும். பற்றாக்குறை காலத்தில் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாநிலங்களுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை காவிரி கண்காணிப்பு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் மனு மீதான விசாரணையை நடுவர் மன்றம் இன்னமும் தொடங்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பான மனுக்கள் மீது விசாரணையை தொடங்கியது. பெங்களூர் காவிரி நீர் உபயோகிப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் சின்ஹா, மார்க்கண்டேய கட்சு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதத்தை கேட்ட பிறகு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது,
காவிரி நதிநீரை பிரித்து கொள்வது தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு மீதான வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும், அதற்கான பரிந்துரை விடுக்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய அரசு பதில் தாக்கல் செய்யவேண்டும். அதுபோல தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களும் பதில் தரவேண்டும்.
இதுபோன்ற பிரச்சனைகளில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண இயலாது அறிவியல், பூகோள ரீதியாக மாநிலங்கள் ஒருங்கிணைந்து தீர்வு காணமுடியும்.
எனவே காவிரி நதிநீ்ர் பிரச்சனையில் ஒவ்வொரு மாநிலமும் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு மற்ற மாநில அரசுகள் உரிய பதிலை விரைவில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.