For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுக்கும் கத்திரி-சென்னையில் வெயில் 102 டிகிரி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:கத்திரி என மக்கள் அன்போடு அழைக்கும் அக்னி நட்சத்திர வெயில் கடுமையாக ஆரம்பித்துள்ளது. சென்னையில் வெயில் 102 டிகிரியைத் தாண்ட ஆரம்பித்துள்ளதால் மக்கள் அணல் தாங்க முடியாமல் அலறிக் கொண்டுள்ளனர்.

அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி ஆரம்பித்தது. அதற்கு முதல் நாள் லேசாக மழை பெய்ததால் சென்னை மக்கள் சந்தோஷமடைந்தனர். ஆனால் அது அல்ப சந்தோஷமாகிப் போனது.

அடுத்த நாள் முதல் வெயில் வெளுத்துக் கட்ட ஆரம்பித்தது. நேற்று வெயில் 102 டிகிரியைத் தாண்டியது. இதனால் நகர் முழுவதும் அணல் அலை அட்டகாசமாக வீசிக் கொண்டிருக்கிறது.

பகலில் வெளியில் போக முடியாமலும், இரவில் புழுக்கம் தாங்க முடியாமலும் சென்னை மக்கள் தகிப்பில் தவித்துக் கொண்டுள்ளனர். வெளியில் போயே ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் குடை, தொப்பி, கைக்குட்டை என பல விதமான பாதுகாப்பு கவசங்களோடு பயந்து பயந்து போய் வருகின்றனர்.

சாலைகளில் பகல் நேரங்களில் இரு சக்கர வாகனங்களை அதிகம் காண முடிவதில்லை. போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

வெயில் அதிகரித்தவண்ணம் இருப்பதால் குளிர்பானங்கள், ஜூஸ், சர்பத், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட உஷ்ணக் குறைப்பு பானங்களின் விற்பனை படு ஜோராக உள்ளது. பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், காவல்துறையினர் நீர் மோர்ப் பந்தல் அமைத்து மண்டை காய்ந்து கிடக்கும் மக்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

மாலை வேளைகளில் சென்னை நகர கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இரவு வரை அங்கேயே இருந்து விட்டு அதன் பின்னர் வீடுகளுக்கு அடையப் போகிறார்கள் மக்கள்.

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இதே நிலைதான். பல நகரங்களிலும் வெயில் வாட்டி எடுப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X