சந்தன கடத்தலில் வீரபாண்டி குடும்பம்:ஜெ புகார்-வனத்துறை அமைச்சர் மறுப்பு
சென்னை:வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் சந்தன கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருப்பதை தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் வன்மையாக மறுத்துள்ளார்.
செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆற்காடு பகுதியில் உள்ள வசம்பாடி என்ற இடத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இந்த சந்தன கடத்தல் நடந்தது.
இந்த எஸ்டேட்டின் உரிமையாளர்களிடையே 1995ம் ஆண்டு பிரச்சனை எழுந்த போது அைதத் தீர்க்க நீதிமன்றம் இருவரை பார்வையாளர்களாக நியமித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வனத்துறையினர், காவல்துறையினருடன் இணைந்து ஆற்காடு எஸ்டேட்டிலிருந்து லாரியில் கடத்த முயன்ற 5,560 கிலோ சந்தன கட்டைகளை கைப்பற்றினர்.
இதையடுத்து எஸ்டேட் மேலாளர் ஜெயம்கொண்டான் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 34 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அஸ்தம்பாடி குடோனில் வைக்கப்பட்டது.இது வழக்கு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது சம்பவம் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் நடந்தது. வனப்பகுதியில் அல்ல. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதே எஸ்டேட்டில் இருந்து சந்தன கட்டைகள் கடத்தப்பட்டன.
அப்போது அதிமுக அரசு கையாண்ட முறைகளை தான் இந்த அரசும் செய்து வருகிறது.
ஆனால், முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இதில் தேவையில்லாமல் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை இழுத்துவிட்டு ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தினமும் ஒரு பொய்யான தகவலை அளித்து வரும் ஜெயலலிதாவின் உள்நோக்கம் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே என்று கூறியுள்ளார் செல்வராஜ்.