தினகரன் கருத்துக் கணிப்பால் 3 உயிர்கள் பறிபோன அநியாயம்-காங்.
சென்னை:தினகரன் நாளிதழ் வெளியிட்ட தேவையில்லாத கருத்துக் கணிப்பால் அநியாயமாக 3 உயிர்கள் பறிபோயுள்ளன என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று மதுரை வன்முறை தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது சுதர்சனம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக் கணிப்பை நடத்த வேண்டிய அவசியம் இப்போது என்ன.
முதல்வர் நலமாகத்தானே இருக்கிறார், அவருக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டதா. தேவையில்லாத இந்த கருத்துக் கணிப்பால் அப்பாவிகள் 3 பேரின் உயிர் அநியாயமாக போயுள்ளது.
ஒருவரை மட்டும் உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்படிச் செய்யும் போது மற்றவர்களைக் குறைத்துக் காட்டுவது தவறு. அந்தத் தவறினால்தான் இன்று மதுரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
மதிமுக சார்பில் பேசிய வீர. இளவரசன், மதுரையில் நடந்த வன்முறையின்போது, காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாத முதல்வர் கருணாநிதி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.