கருணாநிதியின் காவிரி துரோகம்: ஜெ. தாக்கு
சென்னை:காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைத் தடுக்கத் தவறி விட்ட முதல்வர் கருணாநிதி தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை
கடந்த 1967ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு பல முக்கிய அணைகளை, தடுப்பணைகளைக் கட்டியது. கருணாநிதி 1967ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். 1969 முதல் 1976 வரை முதல்வராகவும் இருந்தார்.
கர்நாடக அரசு அணைகள், தடுப்பணைகளைக் கட்டியபோது அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இன்றும் தொடர்ந்து அவரது தமிழக புறக்கணிப்புப் போக்கு நீடிக்கிறது. அவர் மட்டும் அப்போது உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தால் அணைகள் கட்டப்படுவதைத் தவிர்த்திருக்கலாம், தடுத்திருக்கலாம்.
1968ம் ஆண்டு காவிரி பிரச்சினை தொடர்பாக அவர் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை கருணாநிதி தெரிவிக்கவில்லை. 1970ம் ஆண்டு ஹேமாவதி அணையை கர்நாடக அரசு கட்டிக் கொள்ள ஆட்சேபனை இல்லை என்று அறிவித்தார். 1971ம் ஆண்டு காவிரிப் பிரச்சனை தெடார்பான வழக்கை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு விரோதமாக திரும்பப் பெற்றார்.
1974ம் ஆண்டு கர்நாடக அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறினார். எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என கருணாநிதி தாராளமாக நடந்து கொண்டது, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கருணாநிதி செய்த துரோகச் செயல்கள்.
1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. ஆனால் அன்று முதல் இன்று வரை ஒரு வருடம் கூட தமிழகத்திற்குக் கர்நாடகம் முறைப்படி தண்ணீர் தரவில்லை. உச்சநீதிமன்றம், மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றம் என எங்கு முறையிட்டும் தமிழகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
பெருவெள்ளம் வந்த காலங்களில் கர்நாடகத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் நிலை இருக்கிறபோதுதான் உபரி நீர் மேட்டூருக்கு வருகிறது.
இந்த நிலையில் ஓகனேக்கல் அருவியின் மேற்கில் காவிரியில் தடுப்பணை கட்ட கர்நாடகம் முனைப்புடன் உள்ளது. இதைக் கட்டினால் பெருமழை வருகிறபோது மேட்டூருக்கு வரும் உபரி நீர் கூட வராது.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா, அப்படியே திறக்கப்பட்டாலும் கூட கடைமடை விவசாயத்துக்கு அது வருமா என்ற கவலை விவசாயிகளிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் தீவிரமாக இறங்கியுள்ளது விவசாயிகளுக்கு அச்சத்தைக் கூட்டியுள்ளது.
குடும்ப நலனுக்காகவும், சொந்த லாபத்திற்காகவும் மத்திய அரசிடம் செல்வாக்கைப் பயன்படுத்தும் கருணாநிதி, பொது நலனுக்காக கர்நாடகம் கட்டவுள்ள தடுப்பு அணையைத் தடுத்து நிறுத்த உடனடியாக, உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
38 ஆண்டு காலம் எம்.எல்.ஏவாக இருந்ததற்காக பொன்விழா கொண்டாடியும், மகிழ்ச்சியில் திளைத்தும், தொடர்ந்து துரோகம் செய்து வந்தால் தமிழக மக்கள் கருணாநிதியை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.