ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு:ஜூன் 11ல் தீர்ப்பு
சென்னை: சென்னை சேத்துபட்டு ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஜூன் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
சென்னை சேத்துபட்டில் இயங்கி வந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் கடந்த 1993ம் வருடம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கில், அல் உம்மா தலைவர் பாஷா, பழனி பாபா, ஹைதர் அலி, இமாம் அலி, ரபீக் அகமது, சதாபூதின், முக்தார் அகமது, அப்துல்ரஹீம், அபுபக்கர் சித்திக், அகமது ஞானியார், அமருதீன், செரீ, முகமது முசாமொய்தீன், அதுல்புகாரி, முகமது அலி, முகமது அசல், முகமது கபேர், காஜா நிஜாமுதீன், முஸ்தாக் அகமது உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அனைவர் மீதும் சென்னை 2வது தடா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1994 வருடம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 1995 வருடம் விசாரணை தொடங்கியது. வழக்கு நடைபெறும்போது பழனி பாபா கொல்லப்பட்டார். இமாம் அலி பெங்களூரில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மீதம் 8 பேர் சிறையில் உள்ளனர். வழக்கு விசாரணை கடந்த மாதம் 18ம் தேதி முடிவடைந்தது.
தீர்ப்பு மே 9ம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி ராமசாமி அறிவித்திருந்தார். இதையொட்டி நீதிமன்றத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பான மேலும் சில ஆவணங்களை பார்க்க வேண்டியிருப்பதால் அடுத்த மாதம் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.