மதுரை மக்களின் நிம்மதி போச்சு: விஜயகாந்த்
சென்னை:மு.க.அழகிரியின் ஆட்களும், திமுகவினரும் செய்த வன்முறைச் செயல்களால் மதுரையில் மக்கள் நடமாடக் கூட அஞ்சும் நிலை ஏற்பட்டு விட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தினகரன் மீதான தாக்குதல் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை
மதுரையிலும் மற்ற இடங்களிலும் திமுகவினர் நடத்திய திட்டமிட்ட வன்முறைகள் நம்மை திடுக்கிட வைத்துள்ளது.
மதுரை தினகரன் அலுவலகமும், சன் டிவி அலுவலகமும் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது.
அலுவலக ஊழியர்கள் வெளியே வர முடியாமல் 3 பேர் தீக்கிரையாகியுள்ளனர். தங்களைக் காப்பாற்றச் சொல்லி அவர்கள் கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.
பலர் படுகாயமடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வன்முறையாளர்ளுக்குப் பயந்து கடைகள் மூடப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுக்கடங்காத வன்முறையை மதுரை மக்கள் பார்த்ததில்லை. மதுரை மாநகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
கண்ணகி மதுரையை எரித்ததை நாம் பார்த்ததில்லை. ஆனால் அழகிரியின் ஆட்கள் இன்று மதுரையை எரித்ததை தமிழ் மக்கள் அனைவரும் கண்கூடாகக் கண்டுள்ளனர்.
இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகியவை அருகில் இருந்தும் கூட அவற்றின் கைகள் யாரால் கட்டப்பட்டிருந்தன என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர்.
இன்றைய வன்முறை வெறியாட்டத்துக்குப் பின்னர் மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு எப்படி தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதோ, அதேபோல இந்தப் படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில், விசாரித்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்கினால்தான் சட்டம் தன் கடமையைச் செய்ததாக அர்த்தமாகும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி ஒரு குற்றவாளி. அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அழகிரி, இன்று பத்திரிக்கை அலுவலகம் மீது வன்முறையை ஏவி விட்டுள்ளார்.
மகாபாரதத்தில் வரும் திருதராஷ்டிரன் போல, தனது மகன்கள் செய்யும் அட்டூழியங்களை கண் மூடி மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் மதுரை வன்முறையை கடுமையாக கண்டித்துள்ளன.