கொள்ளிடம்: ஆற்றில் மூழ்கி நான்கு பேர் சாவு
கும்பகோணம்:கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை போரூரில் மளிகைக் கடை வைத்திருப்பவர் பெருமாள். இவரும், இவரது உறவினர்கள் 13 பேரும் வேன் மூலம் கும்பகோணம் அடுத்து உள்ள பட்டீஸ்வரத்திற்கு சாமி கும்பிட சென்றனர்.
நேற்று காலை 6 மணியளவில் அணைக்கரை பாலம் அருகே சென்றபோது, கொள்ளிடம் ஆற்றில் குளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து வேன் சாலையோரம் நிறுத்தப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றின் கீழ்க்கரைப் பகுதி சற்று ஆழம் கொண்டது. இதை அறியாத அவர்கள் அந்தப் பகுதியில் குளிக்கச் சென்றனர். சிறுவர்களும், பெரியவர்களுமாக ஆற்றில் இறங்கியுள்ளனர்.
அப்போது தண்ணீரில் இறங்கிய 6 பேர் நீரில் மூழ்கத் தொடங்கினர். இதைக் கண்ட பெருமாள் தண்ணீரில் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் நீரில் மூழ்கத் தொடங்கினார்.
இதையடுத்து அவர்கள் போட்ட சப்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். நீரில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றத் தொடங்கினர்.
ஆனால் சிறுவன் ரவிசங்கர் மற்றும் சங்கீதா ஆகியோரை மட்டுமே உயிரோடு மீட்க முடிந்தது. பெருமாள் (65), திணேஷ்குமார் (10), ஜெயஸ்ரீ (12), சதீஷ் (12) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.