கருணாநிதிக்கு சட்டசபையில் பாராட்டுபர்னாலா வாழ்த்து-தயாநிதி மாறன் புறக்கணிப்பு
சென்னை:சட்டசபை உறுப்பினராக பொன் விழா காணும் முதல்வர் கருணாநிதிக்கு சட்டசபையில் இன்று ஆளுநர் பர்னாலா மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
சட்டசபையில் கருணாநிதி பொன்விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றும், நாளையும் சட்டசபையில் பிற அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு தலைவர்கள் வாழ்த்திப் பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை சபை கூடியதும் ஆளுநர் பர்னாலா மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசும் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி சபைக்குள் வந்தபோது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று வரவேற்றனர்.
பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் முதலில் பேசினார். பின்னர் நிதியமைச்சர் அன்பழகன் பேசினார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் தலைவர் கோவிந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் பேசினர்.
அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டனர்.
நிகழ்ச்சியில், ஆளுநர் பர்னாலா பேசுகையில், தமிழக மக்களின் இதயங்களை வென்றவர் கலைஞர் கருணாநிதி. சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதைத் திறமை, அரசியல் ஞானம் கொண்ட கருணாநிதிக்கு வரலாற்றில் தனி இடம் உண்டு.
தமிழக மக்களின் அமுதமாக அவர் திகழ்கிறார். சட்டசபை உறுப்பினர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.
ஏழை, எளியவர்களின் நலனுக்காக இலவச கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வரலாற்று நாயகராக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.
பாராட்டுக்களுக்கு ஏற்புரையாற்றியபோது முதல்வர் கருணாநிதி தனது சட்டசபை வரலாற்றின் பல சுவாரஸ்ய அனுபவங்களை நினைவு கூர்ந்தார். சட்டசபைக்கு வருவற்கு முன்பு தான் எப்படிப் பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக் கொண்டு வருவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
பேரறிஞர் அண்ணா குறித்துப் பேசியபோது முதல்வரின் கண்கள் கலங்கின, நா தழுதழுத்தது.
தயாநிதி மாறன் புறக்கணிப்பு:
கருணாநிதியின் பொன் விழா பாராட்டு நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தி.க.தலைவர் கி.வீரமணி, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் முதல்வரின் பேரனும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மட்டும் வரவில்லை. மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட கோபத்தில் அவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.