வன்முறை வரும் என்று தெரிந்தும்அழகிரியை கைது செய்யாதது ஏன்: ஜெ.
சென்னை:கருத்துக் கணிப்பால் பெரும் வன்முறை வரும் என்று எனக்கு முன்பே தெரியும் என கூறும் முதல்வர் கருணாநிதி, அப்படியானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏன் மு.க.அழகிரியைக் கைது செய்யவில்லை என்று கேட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தினகரன் கருத்துக் கணிப்பால் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தனது பேச்சைக் கூட கேட்காமல் கருத்துக் கணிப்பை வெளியிட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதை விட மோசமாக, கேவலமாக ஒரு முதல்வரால் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்க முடியாது.
அழகிரியால் வன்முறை மூளும் எனத் தெரிந்திருந்தும் ஏன் அவரையும், அவரது கூட்டாளிகளையும் முன்னெச்சரிக்கையாக முதல்வர் கைது செய்யவில்லை. 3 உயிர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டால் எல்லாம் தீர்ந்து போய் விடுமா.
வாரிசுரிமைப் போரில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து இழப்பீடு தருவது தகுமா. இத்தனை நடந்த போதிலும், எம்.எல்.ஏக்களுக்கு 5 நட்சத்திர ஹோட்டலில், விருந்து கொடுத்துள்ளார் கருணாநிதி. எவ்வளவு கொடூர குணம் இருந்தால் இப்படி நடந்து கொண்டிருப்பார்.
மதுரை சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரியிருப்பது கேலிக்கூத்தானது. மத்தியில் அனைத்து வகையிலும் அதிகாரத்தைக் கொண்டுள்ள கருணாநிதியின் மனப்போக்கின்படிதான் சிபிஐ விசாரணை நடைபெறும்.
குவாத்ரோச்சியைக் காப்பாற்றி தப்பிக்க விட்டதைப் போல மதுரை சம்பவத்திலும் குற்றவாளிகளைத் தப்ப வைத்து விடுவார் கருணாநிதி. இதற்கு இடம் தரக் கூடாது. இதிலிருந்து முதல்வர் தப்பிக்க முடியாது.
தன் வினை தன்னைச் சுடும் என்பது போல கருணாநிதியும், அவரது குடும்பமும் தண்டனை பெறும் காலம் தொடங்கி விட்டது, இது தொடரும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.