ஜூன் 27ல் பதவி விலகுகிறார் டோனி பிளேர்
லண்டன்:இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்தும், தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் ஜூன் 27ம் தேதியன்று விலகுவதாக பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. அக்கட்சியின் தலைவராக உள்ள டோனி பிளேர் பிரதமராகவும் உள்ளார்.
கடந்த பத்து வருடமாக பிளேர் பிரதமர் பதவியில் உள்ளார். சமீப காலமாக பிளேரின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டது. ஈராக் போரில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதால் பிளேரின் பெயர் கெட்டுப் போய் விட்டது.
இந்த நிலையில், ஜூன் 27ம் தேதி பதவி விலகுவதாக பிளேர் அறிவித்துள்ளார். நேற்று தனது தொகுதியான டிரிம்டான் நகரில் அவர் தனது கட்சியினரிடையே பேசுகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டார் பிளேர்.
பிளேர் கூறுகையில், பத்து வருடங்களாக பிரதமர் பதவியில் இருந்து வருகிறேன். போதும் என நினைக்கிறேன். தொடர்ந்து நான் பிரதமர் பதவியில் நீடிப்பது எனக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல.
1997ம் ஆண்டு நான் பிரதமர் பதவிக்கு வந்தபோது இருந்த இங்கிலாந்து இப்போது இல்லை. உலக நாடுகளுக்கு வழி காட்டும் நாடாக இங்கிலாந்து உயர்ந்துள்ளது என்றார் பிளேர்.
பிளேர் பதவி விலகுவதைத் தொடர்ந்து தற்போது நிதியமைச்சராக உள்ள கார்டன் பிரவுன் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார். தொழிலாளர் நலக் கட்சியின் தலைவராகவும் அவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.