கருணாநிதிக்கு பாராட்டு: சென்னையில் கோலாகலம்அழகிரி பங்கேற்பு -தயாநிதி மாறன் புறக்கணிப்பு
சென்னை:முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் நேற்று நடந்த பிரமாண்ட பாராட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டினர். மு.க.அழகிரி முதல் வரிசையில் அமர்ந்து தந்தையின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். ஆனால் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் விழாவுக்கு வராமல் புறக்கணித்தனர்.
சட்டசபை உறுப்பினராக பொன் விழா கண்டுள்ள முதல்வர் கருணாநிதிக்கு நேற்று சென்னை தீவுத் திடலில் பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு பாராட்டிப் பேசினர்.
தமிழகம் முழுவதிலுமிருந்து திரண்டு வந்திருந்த திமுகவினரும், பிற கட்சியினரும் விழாவை பிரமாண்டப்படுத்தினர். சென்னை நகரமே விழாக் கோலம் கண்டிருந்தது.
சென்னை நகரின் முக்கியச் சாலைகள் அனைத்திலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. வாழை மரங்களையும் சாலை நெடுகிலும் நிறுத்தியிருந்தனர்.
கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மாலை 5.40 மணிக்கு சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அழகிரி அமர்க்களம்-தயாநிதி புறக்கணிப்பு
விழாவில் அனைவரும் எதிர்பார்த்தது மு.க.அழகிரியையும், தயாநிதி மாறனையும்தான். மு.க.அழகிரி பிரமாண்ட வரவேற்புக்கு மத்தியில் தீவுத் திடல் மைதானத்திற்குள் பலத்த பாதுகாப்புடன் வந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தது புதிய திருப்பம்.
நேராக உள்ளே வந்த அழகிரி பார்வையாளர் பகுதியின் முதல் வரிசையில் அமர்ந்து விழாவைக் கண்டு ரசித்தார். அவருக்கு இரு புறமும் அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர்.
முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி, ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் திரண்டு வந்து தலைவரைத் தலைவர்கள் பாராட்டியதை கண்டு நெகிழ்ந்தபடி அமர்ந்திருந்தனர்.
ஆனால் கருணாநிதியின் நிழல், கருணாநிதியின் வலது கரம், கருணாநிதியின் டெல்லி குரல் என வர்ணிக்கப்பட்ட, கருணாநிதியால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்ட, முக்கியப் பதவி வழங்கப்பட்ட, முக்கியத்துவம் தரப்பட்ட தயாநிதி மாறன் தாத்தாவின் பாராட்டு விழாவை முற்றிலும் புறக்கணித்தார்.
நேற்று காலை சட்டசபையில் நடந்த பாராட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. அதேபோல தீவுத் திடல் பாராட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. மாறாக விமான நிலையம் வந்து பிரதமரையும், சோனியா காந்தியையும் வரவேற்று விட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.
ஆனால் தயாநிதி மாறன் வராததை திமுகவினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவர்களது உற்சாகத்திலிருந்து தெரிய வந்தது. மாறாக அழகிரிதான் திமுகவினர் மத்தியில் ஹைலைட்டாக இருந்தார்.
திமுக பெருந்தலைகள் பலரும் அழகிரியைப் பார்த்து நலம் விசாரித்துப் பேசியதைக் காண முடிந்தது. அழகிரி-தயாநிதி மாறன் மோதலில் அழகிரிக்கே திமுகவினர் மத்தியில் ஆதரவு இருப்பதையும் உணர முடிந்தது.
தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மாறன் குடும்பமே கருணாநிதியின் பாராட்டு விழாவைப் புறக்கணித்தது. மாறன் குடும்பத்திலிருந்து ஒருவர் கூட கருணாநிதியின் பாராட்டு விழாவுக்கு வராதது திமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல சன் டிவியும் கருணாநிதியின் பாராட்டு விழாவை சரியாக போகஸ் செய்யவில்லை. முதலில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் தீவுத் திடல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும் என சன் டிவி அறிவித்திருந்தது. ஆனால் மாலையில் நேரடி ஒளிபரப்பு இடம்பெறவில்லை.
மேலும் செய்திகளிலும் கூட கருணாநிதி, பிரதமர், சோனியா காந்தி, வட இந்தியத் தலைவர்களின் பேச்சுக்களை மட்டுமே சிறிது நேரம் ஒளிபரப்பினார்கள். தமிழக தலைவர்கள் பேச்சை சுத்தமாக கட் செய்து விட்டனர்.
கலைஞருக்கு நடந்த இந்த மிக மிக பிரமாண்டமான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அனைத்துத் தலைவர்களும், கருணாநிதியை வெகுவாகப் புகழ்ந்து பேசினர்.