நதிகளை இணைத்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்:கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்
சென்னை:தமிழகத்தைச் சுற்றிலும் உள்ள நண்பர்கள் அல்லாத மாநிலங்களால் ஏற்பட்டுள்ள நதி நீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளிலிருந்து தமிழகத்தைக் காக்க நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் முதல்வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீவுத் திடலில் நடந்த சட்டமன்ற பொன்விழாப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை
நான் ஒருமுறை நெல்லைச் சீமையில் நடைபெற்ற, திமுக ஈடுபட்ட ஒரு தேர்தலில் பணியாற்றி, தேர்தல் முடிவு, எனக்கு, நான் ஆற்றிய பணிகளுக்கு மாறாக, திமுகவுக்கு வெற்றி கிட்டாத நிலையில், சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
வழியில் மதுரை மாநகரத்தில், அந்நாள் நண்பர் முத்து என்னை மதுரையில் கூட்டத்தில் பேசுமாறு கேட்டார். நான் மறுத்தேன், ஆனாலும் அவர் விடாமல் வலியுறுத்தியதால் பேசினேன்.
அந்தக் கூட்டத்தில் நான் பேசுகையில், ஒரு திருக்குறள் உண்டு, போர்க்களத்தில் தன்னுடைய கையில் இருக்கும் வேலை எறியும்போது, அது ஒரு யானை மீது தொற்றிக் கொண்டு அந்த வேல் கையிலிருந்து பறிபோய் யானையும் ஓடி விட, வேலும் கையை விட்டு நழுவி விட வேறு என்ன செய்வது என்று அவன் சிந்தித்த நேரத்தில், அவனது உடலிலேயே ஒரு வேல் தைத்திருப்பதை உணர்ந்து, அந்த வேலைப் பிடுங்கிப் போரிட்டான் என்ற குறல் போல, எதிர்காலத்திலே ஒரு மெய்வேல் கிடைக்கும், அதை வைத்துப் போரிடுவேன் என்றேன்.
கிட்டத்தட்ட சோனியா காந்தியும் அந்த நிலையில்தான் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு என்னைப் பாராட்ட வந்துள்ளார். எதிர்காலத்திலே வெற்றிகளைப் பெறத்தக்க வேல்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வயதில் மூத்தவன் என்ற முறையில் வாழ்த்தாக சோனியா காந்திக்கு வழங்க விரும்புகிறேன்.
வாழ்த்த வந்த இடத்தில் சோனியா காந்தி எனக்கு சால்வை அணிவித்து, கேடயம் கொடுத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்தார். நான் சால்வையை மட்டும் பெற்றுக் கொண்டு திருப்தி அடைபவன் அல்ல.
நான் 50 ஆண்டு காலம் சட்டமன்றத்தில் பணியாற்றினேன் என்றால், ஏன் என்னைப் புகழ்கிறார்கள் என்றால், பல பிரச்சினைகளை தமிழகத்தில் சால்வ் செய்வீர்கள் என்பதற்காகத்தான், நான் சட்டமன்றத்தில் பணியாற்றினேன்.
தமிழகத்தில் 3 பக்கமும் எதிரிகள் அல்ல, நண்பர்களாக இல்லாதவர்களைப் பெற்றுள்ளோம். கிழக்கே கர்நாடகம், காவிரிப் பிரச்சினை, வடக்கே ஆந்திரம், பாலாற்றுப் பிரச்சினை, தெற்கே கேரளா, முல்லைப் பெரியாறு பிரச்சினை.
இப்படி 3 பக்கமும் பிரச்சினைகளுக்கிடையே ஒரு தீபகற்ப நிலையிலே நாங்கள் இருக்கிறோம். இதை எங்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. 50 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்தேன், சில காலம் முதல்வராக இருந்துள்ளேன், அந்தக் காலங்களில் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களின் துணையோடு, ஒத்துழைப்போடு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
காவிரிப் பிரச்சினைக்காக இந்த 50 ஆண்டு காலத்தில் 11 முதல்வர்களோடு நான் பேசியுள்ளேன். சில மத்திய அமைச்சர்களுடனும் பேசியுள்ளேன். இன்னும் பிரச்சினை தீரவில்லை. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகாவது வருமா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
அதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் உங்களுக்கு உண்டு என்பதற்காக அதை நான் உங்களிடம் இந்தக் கூட்டத்திலே ஒப்படைக்கிறேன். ஒப்படைத்து விட்டு சும்மா இருக்க மாட்டோம். உங்களுக்கு பக்க பலமாக இருந்து அதைத் தீர்த்து வைப்பதற்கு நாங்களும் துணை நிற்போம். எங்களுக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.
அதேபோல மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு. அதையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டுக்கும் எந்தவிதப் பங்கமும் வராமல் பாதுகாப்பாக நீங்கள் இருக்க வேண்டும்.
நதி நீர்ப் பிரச்சினை தீர வேண்டும் என்றால் நதிகள் இணைக்கப்பட வேண்டும். பொன்விழா நினைவாக, என் மீது உள்ள அன்பின் அடையாளமாக நதிகள் இணைக்கும் முயற்சிக்கு அடிக்கல் நாட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.