கருணாநிதி பொன்விழா செலவு-கணக்கு கேட்கும் ஜெயலலிதா
சென்னை:அதிமுக நியமிக்கும் கணக்காளர் பரிசீலனைக்கு கருணாநிதியின் பொன்விழா முழு செலவுக் கணக்கையும் உட்படுத்த வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறிவாலயத்தில் நடத்த வேண்டிய பொன்விழாவை அரசு செலவில் நடத்தியதில் எந்த நியாமும் இல்லை.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அரசு பணம் செலவழிக்கவில்லை, கட்சிப் பணம் தான் செலவழிக்கப்படுகிறது என கூறியிருந்தார்.
ஆனால் பொன்விழாவிற்கு அச்சடிக்கப்பட்ட பிரம்மாண்ட அழைப்பிதழில் அரசு முத்திரையுடன் அச்சிடப்பட்டுள்ளன. சபாநாயகர் விழாவிற்கு அழைப்பது போல் அழைப்பிதழ்கள் அரசு செலவில் அச்சிடப்பட்டன.
சட்டசபையில் நடந்த 2 நாள் நிகழ்ச்சிக்கு வாடகை ஏதேனும் தரப்பட்டதா, சட்டசபை வாடகைக்கு விடும் நிலை வந்து விட்டதா?. இனி சட்டசபையில் எம்எல்ஏக்களின் காது குத்தல், திருமண வரவேற்பு ஆகியவற்றை நடத்திக் கொள்ளலாமா?.
இந்த விழாவிற்கு அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2 நாட்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்பட்டது?. அரசு ஊழியர்கள் திமுகவிடம் சம்பளம் பெறலாமா?.
கருணாநிதியின் இந்த பொன் விழாவிற்கு ஆன செலவுக்குறித்து முழு கணக்கையும் வெளியிட்டு, அதிமுக நியமிக்கும் கணக்காளர் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்.
முரசொலி மாறனுக்கு செய்த மருத்துவ செலவுக்கான ரூ.200 கோடியை உடனடியாக மத்திய அரசுக்கு அவர்களது சொந்த பணத்திலிருந்து செலுத்த வேண்டும் என கூறியுள்ளார் ஜெயலலிதா.