தொழில்நுட்பத்துறையின் நண்பர் தயாநிதி-நாஸ்காம்
சென்னை: தொழில்நுட்பத்துறையின் சிறந்த நண்பராக தயாநிதி மாறன் இருந்தார் என சாப்ட்வேர் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாஸ்காம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தயாநிதி மாறன், கடந்த 3 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறையில் முக்கிய பங்காற்றினார். வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொண்ட தயாநிதி மாறன் தன் அமைச்சர் பொறுப்பில் வெற்றிகரமாக திகழ்ந்தார். அவருக்கு எங்கள் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவை அவுட்சோர்சிங்கில் முன்னணியில் இருக்க செய்வதிலும், உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப சந்தை வளர்ச்சி பெறவும் மிகவும் ஆர்வம் காட்டினார். இவரது முயற்சி காரணமாக கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறையிலும் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறைக்கும் அரசுக்கும் இடையேயான கூட்டுறவை பலப்படுத்தினார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர வேண்டும் என்பதில் தயாநிதி மாறன் முக்கிய பங்காற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
தயாநிதி மாறன் தன் சாதனைகளை பற்றி செய்தியாளர்களிடையே கூறுகையில்,
கடந்த 2005 ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரையிலான 26 மாதத்தில் இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறையில்இந்திய நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் ரூ. 2 லட்சத்து 66,000 கோடி அளவில் முதலீடுகள் செய்துள்ளன.
எரிக்சன், எல்.ஜி., நோக்கியா, அல்காடெல், சீமென்ஸ், சிஸ்கோ, சாம்சங், செம் இந்தியா, இன்டெல் கார்பரேஷன், மைக்ரோசாப்ட், ஐபிஎம், மோட்டரோலா, டெல் கம்ப்யூட்டர், குவால்காம், சிமென்டெக், லெனோவா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1.20 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன.
உள்நாட்டு நிறுவனங்களான எஸ்ஸார், ஸ்பைஸ், எச்சிஎல், வீடியோகான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரூ.1.46 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன.
தமிழகத்தில் நோக்கியா, மோட்டரோலா, ஐபிஎம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும், எச்சிஎல், வீடியோகான் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் ரூ.47,000 கோடியில் தொழில் முதலீடு செய்ய காரணமாக இருந்தேன்.
எரிக்சன் நிறுவனம் ரூ.410 கோடியில் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு மையத்தை துவக்கியுள்ளது. நோக்கியா நிறுவனம் ரூ.1230 கோடி முதலீட்டில் 10,000 ஊழியர்களுடன் செல்போன்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது. அஸ்போகாம்ப் நிறுவனம் ரூ.410 கோடி் முதலீட்டில் சர்க்யூட் போர்டு தயாரிக்கும் தொழிற்சாலையை சென்னையில் தொடங்கியுள்ளது.
சால்காம்ப் நிறுவனம் ரூ.32.80 கோடி முதலீட்டில் சென்னையில் தொடங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் கலர் டிவி, பிரிண்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.410 கோடி மூதலீட்டில் ஆரம்பித்துள்ளது. இஎம்சி சாப்ட்வேர் நிறுவனம் பெங்களூரில் ரூ. 2050 கோடி முதலீட்டில் சாப்ட்வேர் மையத்தை தொடங்கவுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிஎஸ்என்எல் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி, செல்போனின் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய திட்டத்தை அறிமுக செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது அது முடியாமல் போனது.
இருந்தாலும் எனக்கு பின்னால் வரும் அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று இந்த திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். நான் குறி்ப்பிட்ட அதே நாளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.