தயாநிதி ஆட்கள் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: பொன்முடி
சென்னை:தயாநிதி மாறனின் ஆதரவாளர்கள் சிலர் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டினர். இந்த மாதிரியான மிரட்டலுக்கு நாங்கள் பயப்படமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் நடந்த திமுக நிர்வாக குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள் என்ன பேசினர் என்ற விவரத்தை கலெக்ட் செய்தோம். அதன் விவரம்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், தயாநிதி மாறன் மீது எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற ரீதியில் நடவடிக்கை எடுக்காமல், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகு முடிவு செய்வோம் என்றார். இந்த கருத்துக்கு கோ.சி. மணியும் ஆதரவு அளித்தார்.
மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் பொன்முடி பேசுகையில், என் வீட்டுக்கு வந்த செல்வம், தயாநிதி மாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அப்படி மீறி நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
அவர் சாதாரணமானவர் என எண்ண வேண்டாம். எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. திமுக ஆட்சி அமைய அவர் காரணமாக இருந்ததை மறக்க வேண்டாம். ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள்.
தயாநிதி என்ன தவறு செய்தார், எப்போது கட்சியின் கட்டுபாட்டை மீறினார். பத்திரிக்கையின் வெளியான கருத்து கணிப்பு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே, ஏன் வன்முறையை மேற்கொள்ளவேண்டும்.
திமுகவில் அழகிரி வட்ட செயலாளரா அல்லது மாவட்ட செயலாளரா, அவர் கட்சியில் பொறுப்பில் இல்லாதபோது எதற்காக கோபப்பட வேண்டும் என என்னிடம் கேட்டார்.
தயாநிதி மாறனை கட்சியிலிருந்து நீக்குவோம். இது போன்ற எந்தவிதமான மிரட்டலுக்கும் திமுக பயப்படாது என்றார் பொன்முடி.