6 ராஜ்யசபா சீட்களுக்கு ஜூன் 15ல் தேர்தல்
சென்னை:தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 18 எம்.பிக்களைத் தேர்ந்தெடுக்க முடியும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆறு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தற்போது உறுப்பினர்களாக உள்ள கே.பி.கே.குமரன் (திமுக), கோகுல இந்திரா, எஸ்.எஸ்.சந்திரன், காமராஜ், பி.ஜி.நாராயணன் (அதிமுக), ஞானதேசிகன் (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த ஆறு இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் ஜூன் 5ம் தேதி. மனுக்கள் பரிசீலனை 6ம் தேதி நடைபெறும். மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 8. போட்டி இருந்தால், ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறும்.
தற்போது உள்ள நிலவரப்படி திமுகவுக்கு 4 எம்.பிக்களும், அதிமுகவுக்கு 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கும், இந்திய கம்யூனிஸ்டுக்கும் தலா ஒரு சீட் வழங்கப்படும். இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நல்லகண்ணு போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.