கர்நாடகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை களையகருணாநிதி முயல வேண்டும்-குமாரசாமி
பெங்களுரூ:காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நான் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கிறேன். அதேபோல கர்நாடகாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்வு காண முன் வர வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு கர்நாடகத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காண அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் தமிழக முதல்வர் கருணாநிதி மிகவும் அனுபவமிக்கவர். தமிழக சட்டசபையில் தொடர்ந்து 50 ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றியதற்காக பொன்விழாவையும் கொண்டாடியுள்ளார்.
காவரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக உள்ளது என அவர் கருத்து தெரிவித்து இருப்பது வியப்பை அளிக்கிறது.
கருணாநிதி கூறுவதைப் போல காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நான் தலையீட்டு தீர்வு காண உதவ தயாராக இருக்கிறேன். கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருணாநிதி தலையிட்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
அவர் தலைமையில் மேற்கொள்ளும் இத்தீர்வு முயற்சிக்கு நான் அனைத்து வகையிலும் உதவ தயாராக இருக்கிறேன். காவிரி பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை திரையிடக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். இது சட்டப்படி தவறு.
இருப்பினும் கோரிக்கையை தடுக்க முயற்சித்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் எந்த கருத்தையும் சொல்ல நான் விரும்பவில்லை என அவர் கூறினார்.