அமெரிக்காவிலிருந்து சென்னை விரைகிறார் மல்லிகா மாறன்!!
சென்னை:அமெரிக்கா சென்றுள்ள முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், கருணாநிதி குடும்பத்திற்கும், தயாநிதி, கலாநிதிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து சண்டையைத் தீர்த்து வைக்க நாளை சென்னை விரைகிறார்.
முரசொலி மாறனின் மகள் டாக்டர் அன்புக்கரசி அமெரிக்காவில் உள்ளார். அவர் தற்போது கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து அவரைக் கவனிப்பதற்காக மல்லிகா மாறன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந் நிலையில்தான் தினகரன் கருத்துக் கணிப்பால் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தை அடித்து சூறையாடினர். இந்தக் குடும்பச் சண்டையில் அப்பாவிகள் 3 பேரின் உயிர்கள் பறிபோய் விட்டன.
இதன் தொடர்ச்சியாக தயாநிதி பதவியிழந்து நிற்கிறார்.
கருணாநிதியின் குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இந்த பெரும் மோதலால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா மாறன், அமெரிக்காவிலிருந்தபடி தொலைபேசி மூலம் சமரசம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரால் கருணாநிதி குடும்பத்தாருடன் பேச முடியவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து சென்னைக்குத் திரும்பி நேரடியாக கருணாநிதி மற்றும் குடும்பத்தினருடன் சமரசப் பேச்சில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியையும் சென்னையில் நடத்த அவர் தீர்மானித்துள்ளார்.
வளைகாப்புக்குள் சமரசம் ஏற்பட்டால் கருணாநிதி குடும்பத்தினர் அதில் கலந்து கொள்ளக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.