பெற்ற மகளை பிச்சையெடுக்க வைத்த தாய்:மறுத்ததால் சூடு போட்டக் கொடுமை
தூத்துக்குடி:தூத்துக்குடியில், மகளுக்கு சூடு போட்டு பிச்சை எடுக்க வைத்த பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே வாகைக்குளம் என்ற இடத்தில் ஒரு சிறுமி தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சிறுமியை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையின்போது சிறுமி கூறுகையில், எனது பெயர் திலகவதி. 5 வயதாகிறது. எனது தாயார் அமுதா.
அவர் என்னை பிச்சை எடுக்கக் கூறினார். ஆனால் நான் மறுத்ததால் எனக்கு காலில் சூடு போட்டார். பின்னர் சாலையில் விட்டு விட்டுப் போய் விட்டார்.
எனது அக்கா மஞ்சுளாவையும் இதுபோலவே கொடுமைப்படுத்தினார். அவரை தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு ரூ 10,000 பணத்தை வாங்கிக் கொண்டு கொத்தடிமையாக விற்று விட்டார் என்றார்.
இதைக் கேட்டு அதிர்ந்த போலீஸார் அமுதாவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறார் இல்லம் ஒன்றுக்கு திலவகதி அனுப்பி வைக்கப்பட்டாள்.