சென்னை அபார்ட்மெண்டில் பெண் கொலை-நகைகள் கொள்ளை
சென்னை:சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில், தனியாக இருந்த பெண்மணியைக் கொலை செய்து விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் புறநகர்ப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் 2வது தெருவில் வசிப்பவர் ஜெகதீஸ்வரி. இவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் பத்மினி (51), சகோதரர் லோகேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார்.
லோகேஷ் பெங்களூரில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்குப் போய் விட்டார் ஜெகதீஸ்வரி. வீட்டில் பத்மினி மட்டும் இருந்தார். மதியம் வீடு திரும்பிய ஜெகதீஸ்வரி, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு தட்டினார். ஆனால் திறக்கப்படவில்லை.
பின்புறம் போய் பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்ற அவர் அங்கு தாயார் பத்மினி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 25 பவுன் நகைகளும் திருடப்பட்டிருந்தன. பணமும் திருட்டுப் போயிருந்தது.
பத்மினி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட திருடர்கள் அவரை அடித்துக் கொலை செய்து நகை, பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த படுகொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.