For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனாதிபதி பதவி: பிரணாப் முகர்ஜிக்கு கம்யூ. ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தினால், அதற்கு இடது சாரிக் கட்சிகள் ஆதரவு தரும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரையே மீண்டும் குடியரசு தலைவராக தேர்வு செய்ய சில கட்சிகள் முயன்றன. ஆனால் கலாம் பதவியில் நீடிக்க விரும்பவில்லை.

இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் இதுவரை குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.

Pranab Mukherjee

பாஜக தரப்பில் குடியரசுத் துணைத் தலைவர் பைரான்சிங் ஷெகாவத்தை நிறுத்த விரும்புகின்றனர். ஆனால் பாஜக வேட்பாளருக்கு சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அதிமுக, அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலை உள்ளது.

இருப்பினும் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

அதேசமயம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கிட்டத்தட்ட வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்பட்டு விட்டது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர்கள் வேட்பாளராக்க தீர்மானித்துள்ளனர்.

முன்னதாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை வேட்பாளராக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் அதை காங்கிரஸ் ஏற்கவில்லை. மாறாக, மேங்கு வங்கத்தைச் சேர்ந்தவரான பிரணாப் முகர்ஜியை பரிந்துரைத்தது.

இவரும் வங்காளிதான் என்பதால் பிரணாப்பை ஆதரிக்க இடதுசாரித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். டெல்லியில் நேற்று இடதுசாரித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏபி.பர்தான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டால் அவரை இடதுசாரிகள் எதிர்க்காது என்றனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரகாஷ் கரத் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜியைத் தவிர கரண்சிங், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும் பிரணாப்புக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

மறுபக்கம் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை எதிர்க்க 3வது அணிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன. உ.பியில் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதியின் ஆதரவு யாருக்கு என்பதும் இன்னும் தெரியவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக இருந்தாலும் சரி, மாநிலக் கட்சிகளின் கையில்தான் வெற்றிக்கனி உள்ளது என்பதால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை மாநிலக் கட்சிகள்தான் நிர்ணயிக்கப் போகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X