கருணாநிதியுடன் ராமதாஸ் முக்கிய சந்திப்பு
சென்னை:முதல்வர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை அவசரமாக சந்திக்கிறார். பரபரப்பான பின்னணியில் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீப காலமாக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ். பல பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீட்டில் தொடங்கிய இந்த பூசல் இன்னும் முடிவு பெறாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மணல் குவாரிகளில் ஊழல் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் திமுக அரசுடன் பாமக நேரடியான மோதலில் குதித்துள்ளது.
குறிப்பாக மதுக் கடைகள் விவகாரத்தில் ராமதாஸ் படு தீவிரமாக உள்ளார். நேற்று சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மதுக் கடைகளை முதல்வர் கருணாநிதி மூட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தில் குதிப்போம் என்று கோபமாக அறிவித்தார்.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் இன்று மாலை முதல்வர் கருணாநிதியை அவசரமாக சந்திக்க திட்டமிட்டுள்ளார் ராமதாஸ். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த சந்திப்புக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. கருணாநிதி அழைத்துள்ளாரா அல்லது ராமதாஸ் அவராகவே சந்திக்க வருகிறாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.
முதல்வரை சந்தித்த பின்னர் முதல்வர் வீட்டுக்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் ராமதாஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.