கொடுஞ்செயலை எதிர்த்து போராடுவோம்: கருணாநிதி
சென்னை:ராஜூவ் காந்தி நினைவு நாளில் கொடுஞ்செயலையும், வன்முறையையும் எதிர்த்து போராடுவோம் என முதல்வர் கருணாநிதி தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆண்டுதோறும் கொடுஞ் செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கோட்டையில் ராஜீவ் காந்தியின் படம் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது. அவர் படத்திற்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் கருணாநிதி, கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியை வாசித்தார். அதை அரசு ஊழியர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கருணாநிதி வாசித்த உறுதிமொழி
அகிம்சை, சகிப்புதன்மை உடைய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகை கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம்.
எல்லா மக்களிடையேயும் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றையும் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்து போராடவும், நாம் உறுதி கூறுகிறோம்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரண் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.