சன் டிவிக்கு போட்டியாய் கலை(ஞர்) டிவி:ராஜ் டிவி-திமுகவின் புதிய கூட்டணி
சென்னை: முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது.
திமுகவிற்கு ஆதரவாக சன் டிவி கடந்த 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது திமுகவிற்கு, சன் டிவி நிர்வாகத்திற்குமிடையே பிளவு ஏற்பட்டதால் திமுகவுக்கு என தனி சேனல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவிற்கு ஜெயா டிவி, பாமகவிற்கு மக்கள் டிவி என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் இருக்கும் நிலையில் திமுகவிற்கு என தனியாக ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறிய கருத்தை முதல்வரும் ஏற்றுக் கொண்டுவிட்டார்.
சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப அனுமதியளிக்கப்பட்ட ராஜ் டிவி உரிமையாளர்களுடன் இது தொடர்பாக திமுக சார்பாக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
ராஜ் டிவி நிர்வாகம் சேனல் நடத்துவதில் அனுபவமுள்ளது என்பதால் திமுகவின் அதிகாரபூர்வ சேனலை நடத்த அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கான தொழில்நுட்ப வசதிகளை செய்தசு தரும் பொறுப்பு மத்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய டிவிக்கு கலைஞர் டிவி அல்லது கலை டிவி என பெயர் சூட்டப்பட்டு, உதயசூரியன் சின்னத்தையே லோகோவாக்கவுள்ளனர் என்று தெரிகிறது.
இந்த டிவி சேனல் முதல்வரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் செயல்பட தொடங்கும்.
இதுகுறித்து ராஜ் டிவி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,
திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து வெகு விரைவில் ஒரு புதிய சேனலை ஆரம்பிக்கவுள்ளன. கலைஞர் டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும். கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக மக்களை கவரும் முன்னணி சேனலாக இருக்கும் என்றார்.
இதனால் அறிவாயத்தில் இயங்கிவரும் சன் டிவியின் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதிய கலைஞர் டிவி சேனல் அலுவலகம் இயங்கும்.
இரு தினங்களுக்கு மகாபலிபுரம் சாலையில் உள்ள பண்ணையில் ஓய்வெடுத்த முதல்வர் கருணாநிதி இந்த டிவியை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
கலாநிதி மாறன் சன் டிவியை ஆரம்பித்தபோது உடனிருந்த சரத் என்பவரும் அந்த ஆலோசனைகளில் பங்கேற்றுள்ளார்.