4200 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம்
சென்னைசென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்திலேயே விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது எனவும், ஸ்ரீபெரும்புதூர் அருகே 4200 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பது எனவும் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த சட்டசபை கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் எதிர்கால தேவைகளைக் கருதி அதை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு கோரி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை கடிதம் எழுதியது.
இதையடுத்து விமான நிலையத்தின் பின்னாலேயே இடம் ஒதுக்கியது அரசுய இருப்பினும் மக்கள் வசித்து வரும் அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளும் விமான நிலையத்துக்கான இடத்துக்காக ஒதுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் தொடங்கினர். மக்களின் போராட்டத்திற்கு பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.
விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மக்கள் வசிக்கும் நிலத்தை கையகப்படுத்துவதற்குப் பதில், ஓரகடம் அல்லது ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில், புதிதாக விமான நிலையத்தை அமைக்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக முதல்வரை நேரில் பார்த்தும் மனு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இப்பிரச்சினைய சுமூகமாக முடிக்க முடிவு செய்துள்ள முதல்வர் கருணாநிதி, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வர தீர்மானித்தார்.
இதையடுத்து இன்று காலை இக்கூட்டம் நடந்தது.
இதில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாமக சார்பில் ஜி.கே.மணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை விமான நிலையம் தற்போதையே இடத்திலேயே விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து 1070 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்படும்.
கையகப்படுத்தப்படும் பணியின்போது 947 வீடுகள் இடிக்கப்படும். நிலம் மற்றும் வீடுகளை வழங்குவோருக்கு நியாயமான இழப்பீடு தரப்படும்.
நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு ரூ. 1000 கோடியும், கட்டுமானப் பணிக்கு ரூ. 1000 கோடியும் செலவிடப்படும்.
இதுபோக, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 4200 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தையும் இந்திய விமான நிலைய ஆணையமே மேற்கொள்ளும் என்றார் முதல்வர் கருணாநிதி.