கடத்தியது இலங்கை கடற் படையே;மீண்ட சிறுவன் பரபரப்பு தகவல்!
ராமேஸ்வரம்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களைக் கடத்தியது இலங்கை கடற்படைதான் என்று விடுதலையாகி சொந்த ஊர் திரும்பியுள்ள மீனவ சிறுவன் அனிஸ்டன் கூறியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சைமன் என்கிற மீனவர் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 11 மீனவர்கள் உள்பட 12 பேர் 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்கள். அவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக டிஜிபி முகர்ஜி தெரிவித்தார்.
அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 14 வயது சிறுவன் அனிஸ்டன் உள்ளிட்ட 11 பேரும் ராமேஸ்வரம் அருகே விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்தது. முதல்வரையும் அவர்கள் சந்தித்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் அனிஸ்டனை நிருபர்கள் சந்தித்துப் பேசியபோது, அவன் பரபரப்பு தகவலை வெளியிட்டான். அனிஸ்டன் கூறுகையில், நாங்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, முகமூடி அணிந்த சிலர் பிடித்து சென்றனர்.
இலங்கைக்கு கொண்டு சென்ற அவர்கள் அடுத்த நாள் விடுவிப்பதாக கூறினர். ஆனால் 68 நாட்களாக அடைத்து வைத்தனர். நாங்களே சமைத்து சாப்பிட்டோம்.
வெள்ளிக்கிழமை சிலர் எங்களை இலங்கை கடற் படை படகில் ஏற்றினர். அந்த படகில் முதலில் எங்களை கடத்தி சென்ற முகமூடி ஆட்களும் இருந்தனர்.
ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, இலங்கை படையினர் துப்பாக்கியால் சுட முயன்றனர். அப்போது எங்கள் படகில் இருந்தவர்கள் வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு நாங்களும் இலங்கை படையினர்தான், மீனவர்களை விடுவிக்க செல்கிறோம் என கூறினர்.
அதன்பிறகு அந்த கப்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என கூறியுள்ளான் அனிஸ்டன். அனிஸ்டன் உண்மைகளைக் கூற ஆரம்பித்தவுடன் அருகில் இருந்த மற்ற மீனவர்கள் அவனை தொடர்ந்து பேச விடாமல் தடுத்து விட்டனர்.
விடுதலைப் புலிகள்தான் கடத்தினர் என்று தமிழக காவல்துறை திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் இலங்கை கடற்படைதான் தங்களைக் கடத்திச் சென்றதாக அனிஸ்டன் கூறியுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
மொத்தத்தில் இந்த மீனவர் கடத்தல் மற்றும் விடுதலை பெரும் மர்மக் கதையாகவே உள்ளது.