கலைஞர் டிவி திமுக டிவி-கருணாநிதி அறிவிப்பு
சென்னை:ராஜ் டிவியின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும் கலைஞர் டிவி திமுக சார்பில் ஆரம்பிக்கப்படுகிறது. அதன் சின்னமாக உதயசூரியன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மதுரை தினகரன் சம்பவத்தைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியைப் பறித்த திமுக இப்போது தனக்கென தனி சானலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ராஜ் டிவியின் உதவியுடன் கலைஞர் டிவி என்ற புதிய டிவியை ஆரம்பிக்கிறது. இதுகுறித்து தெரிவித்த ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் இது திமுக டிவி அல்ல என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கலைஞர் டிவி திமுக டிவிதான் என்று விவரித்தார். அவர் கூறுகையில், சுதந்திர தினத்தன்று கலைஞர் டிவி ஒளிபரப்பைத் தொடங்கும். திமுக சார்பில் இந்த டிவி தொடங்கப்படுகிறது.
திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன், கலைஞர் டிவியின் லோகோவாக இருக்கும். கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான பாலமாக, மக்களுக்கு நண்பனாக, மக்களுக்கு சரியான தகவலைத் தரும் தொலைக்காட்சியாக கலைஞர் டிவி செயல்படும்.
மக்களின் தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்யும் சேனலாக கலைஞர் டிவி இருக்கும். ஜூன் 3ம் தேதி கலைஞர் டிவி தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
நிகழ்ச்சி வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இத்துறையில் அனுபவம் வாய்ந்த பலர் இப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
டிவி நிர்வாகத்தில் திமுகவின் குறுக்கீடு இருக்காது. திமுகவுக்காக ராஜ் டிவி இந்த சானலை நடத்தும். கலைஞர் டிவிக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட சம்பிரதாயங்களுக்காக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையிடம் முறைப்படி மனு செய்துள்ளோம்.
டிவியின் பெயர் கலைஞர் டிவி என்று இருந்தாலும் முழுக்க முழுக்க கட்சி சார்ந்த சானலாக இது இருக்காது. இந்தத் தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடம் புகார்களைக் கேட்டு உடனடியாக அதைத் தீர்த்தும் வைக்கும் வகையிலான நிகழ்ச்சியை நடத்தலாம் என பலர் யோசனை கூறினார்.
டிவி மூலமாக ஆட்சியை நடத்த முடியாது என்பது எனது எண்ணம். எனவே அந்த யோசனையை நான் ஏற்கவில்லை. மேலும் அது சினிமாவில் மட்டுமே சாத்தியமானதாகும். அரசின் திட்டங்களை மக்களிடம் சரியா முறையில் கொண்டு சேர்க்க இந்த சேனலை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்.
சன் டிவி நிறுவனத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியேறுமாறு நான் உத்தரவிடவில்லை. அவர்கள் விரும்பும் வரை அறிவாலயத்தில் இருந்து செயல்படலாம். அதற்குரிய வாடகையை அவர்கள் தருகிறார்கள், பராமரிப்புத் தொகையைத் தருகிறார்கள். எனவே அவர்கள் வெளியேற வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை என்றார்.
மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும்.
ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி போட்டியிடுவாரா, இல்லையா என்பதை கட்சியின் உயர் மட்டக் குழு முடிவு செய்யும்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4 வேட்பாளர்கள் மட்டும் நிறுத்தப்படுவர். மீதம் உள்ள 2 இடங்கள் அதிமுகவுக்கு ஒதுக்கப்படும். இதில் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும் என்றார் கருணாநிதி
இதற்கிடையே, சன் டிவியில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த சரத்குமார், கலைஞர் டிவியின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். கலைஞர் டிவியில் தினசரி 9 செய்தி அறிக்கைகளை ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர டிவி தொடர்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.