தமிழகம் முழுவதும் இடியுடன் மழை:மின்னல் தாக்கி 5 பேர் பலி
கடலூர்தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று சூறாவளி, இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சூறாவளிக் காற்றும், கன மழையும் பெய்து வருகின்றன. இடியும், மின்னலும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
நேற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது. இதில் பல தோட்டங்கள் சிக்கி சேதமடைந்தன.
சென்னை நகரிலும் நேற்று மாலையில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. நகரின் உட் பகுதியில் நல்ல மழை பெய்தது. ஆனால் புறநகர்ப் பகுதியில் வெறும் காற்று மட்டுமே வீசி ஓய்ந்தது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த கனகராணி (40), அவரது மகள் சாமுண்டீஸ்வரி (14), மகன்கள் விஜயன் (11), சூர்யா (10), ரத்தினசாமி என்பவரின் மனைவி பச்சையம்மாள் உள்ளிட்டோர் புலியூர் பகுதியில் முந்திரி பொறுக்கச் சென்றனர்.
அப்போது பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. காட்டுக்குள் ஒதுங்க இடம் இல்லாததால் அனைவரும் நனைந்தபடியே முந்திரி பொறுக்கினர். அப்போது மின்னல் தாக்கியது.
இதில் கனகராணி, விஜயன், சாமுண்டீஸ்வரி ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதேபோல பண்ருட்டி அருகே காடம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரும் முந்திரி பொறுக்கிக் கொண்டிருந்தபோது இடி தாக்கி இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இடி தாக்கி பரிதாபமாக இறந்தார்.