எஸ்.பி. பிரேம்குமார் டிஸ்மிஸ்
சென்னை: முன்னாள் ராணுவ வீரரையும், அவரது மனையும் கை விலங்கிட்டு தெருவில் இழுத்துச் சென்ற வழக்கில் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்.பி. பிரேம்குமார் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமன் என்பவரையும், அவரது மகனையும் நடு ரோட்டில் அடித்து உதைத்து கையில் விலங்கிட்டு தெருத் தெருவாக இழுத்துச் சென்று சித்தரவதை செய்ததாக பிரேம்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிரேம் குமாருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து பிரேம்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் தற்போது அவர் முன்ஜாமீனில் உள்ளார்.
இந்த நிலையில், சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியத்தை மருத்துவமனையில் நேரில் சந்தித்து தப்பிச் செல்லுமாறு கூறிதாக பிரேம்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்தான் நல்லகாமன் வழக்கில் சிக்கி 1 மாத சிறை தண்டனை பெற்றார். இதையடுத்து ஏன் உங்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கக் கூடாது என்று கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பிரேம்குமார் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அவரது விளக்கம் திருப்தி அளிக்காததால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுடன் போலீஸார் நேற்று இரவு பிரேம்குமார் வீட்டுக்குச் சென்றனர்.
ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து டிஸ்மிஸ் நோட்டீஸை, வீட்டுக் கதவில் ஓட்டி விட்டு போலீஸார் சென்றனர்.