சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி:சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தண்டி சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யானந்த பரத்ஜி மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், இந்து புராணங்களின்படி சீதையை மீட்க இலங்கை செல்ல ராமர், வானர சேனைகளின் உதவியுடன் பாலம் கட்டினார். அந்தப் பாலம் பாம்பன் அருகே கடலுக்கடியில் உள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தின் தற்போதைய வழியில், ராமர் பாலம் உள்ளால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பாலம் அழியும் நிலை உள்ளது. சுனாமி தாக்குதலின்போது இந்தப் பாலம்தான் ராமேஸ்வரத்தைக் காப்பாற்றியது.
ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இது ஆதம் பாலம் என்று அழைக்கப்பட்ட போதிலும், மதம் மற்றும் புராண ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பாலத்தை அழித்தால் அது இந்துக்களின் மத உணர்வுகளைப் பாதிக்கும்.
எனவே இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். திட்டம் பற்றி ஆராய பூகோள அமைப்புகள், இயற்கை வளம், மண்ணியல், வானிலை, கடலியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் சுனாமி குறித்த அறிவு நிறைந்த நிபுணர்களைக் கொண்ட கமிட்டியை அமைக்க உத்தரவிட வேண்டும்.
உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இந்த பாலத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பச்சாயத், டி.கே. ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது, இதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.