லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில்கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர்.
சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார்.
அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது.
இதனால் கார் நிலைதடுமாறி பேருந்தின் அடியில் போய் சிக்கிக் கொண்டது. மேலும் மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித்துக் கொண்டது.
குபுகுபுவென புகையுடன் காரில் ஏற்பட்ட தீ பேருந்திலும் பற்றிக் கொண்டது. இதைப் பார்த்த பேருந்தின் டிரைவர் பேருந்தில் இருந்த பயணிகளை வேகமாக கீழிறக்கினார். சிறிது நேரத்தில் பேருந்தும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் சிக்கிக் கொண்ட கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த 7 பேரும் தப்பி வர முடியாமல் பரிதாபமாக காருக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர்.
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சேந்தமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிர்மல்ராஜ், அன்பரசு உள்ளிட்டோர்தான் காரில் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் சுற்றுலாவாக காரில் கிளம்பியுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தால், பேருந்தும், காரும் முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.
விபத்து காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.