ஜெ.வின் கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வுசெய்ய அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு
சென்னை: ஜெயலலிதாவுக்குச் சொந்தமானதாக கருதப்படும் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகளை உள்ளே நுழைய அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் முடிவு செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.எம்.ராஜு தமிழக அரசுக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியிருந்தார். அதில்,
கொடநாடு கிராமத்தில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரில் 1995ம் ஆண்டு 835 ஏக்கர் தேயிலை தோட்டத்தை வாங்கினார்.
அந்தத் தோட்டத்துக்கான பதிவுக் கட்டணத்தை ஏமாற்றி பங்கு பரிவர்த்தனை மூலமாக வாங்கி தன் வசம் வைத்து அனுபவித்து வருகிறார். இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் ரூபாய் பதிவுக் கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா, அவரது பினாமியான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் அந்த இடத்தில், இதுவரை 90க்கு மேற்பட்ட அறைகள் கொண்ட பெரிய பங்களாவை அரசின் அனுமதியின்றி கட்டியுள்ளனர். தற்போது அதில் விரிவாக்க பணிகளையும் செய்து வருகின்றனர்.
மலைப்பகுதி பாதுகாப்பு குழுமத்திலிருந்து அனுமதி பெறாமல், பல வருடமாக கட்டி வரும் இந்தக் கட்டடத்தினால், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்ப்டுள்ளது.
கடந்த 1ம் தேதி கொட நாடு ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் என்ற ஊரில் கிராம சபா கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.ஆனால் அந்த தோட்டத்தை ஒட்டியுள்ள சாலையில் அரசு ஊழியர்கள், ஊராட்சித் தலைவர்கள், பொதுமக்கள் சென்றபோது, அங்கு நின்ற பாதுகாவலர்கள் ஜெயலலிதா இங்கு தங்கியுள்ளதால் இந்த வழியாக செல்ல கூடாது என தடுத்து விட்டனர்.
இதனால் கிராம சபை கூட்டமும் நடத்த முடியவில்லை. இதுகுறித்து ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார் ராஜு.
இந்த புகார் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவருக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி நேற்று காலை கொடநாடு ஊராட்சி தலைவர், குன்னூர் கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், நகர ஊரமைப்பு துணை இயக்குனர் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக அனுப்பினார்.
ஆனால் அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு நடத்த அங்கிருந்த பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. எஸ்டேட் மேலாளர் அனுமதி பெறவேண்டும் என தெரிவித்ததால் மேலாளரிடம் அனுமதி கேட்கப்பட்டு, தேவைப்படும் தகவல்கள் குறித்த விவரப் பட்டியலும் அவருக்கு காண்பிக்கப்பட்டது.
பட்டியலில் கேட்கப்பட்ட விவரங்கள் சென்னையிலுள்ள பொறியாளரிடம் உள்ளதாகவும் பின்னர் பெற்று தருவதாகவும், முக்கிய பிரமுகர் தங்கியிருப்பதால் பாதுகாப்பு கருதி ஆய்வுக்கு அனுமதிக்க முடியாது எனவும் எஸ்டேட் மேலாளர் தெரிவித்தார்.
இதனால் அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.