போதைப் பொருள்: முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது
டெல்லி:கொகைன் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக கூறி முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
1980களில் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தவர் மணீந்தர் சிங். சுழற்பந்து வீச்சாளரான மணீந்தர் சிங் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கிழக்கு டெல்லியில், ப்ரீத் விகார் பகுதியில் மணீந்தர் சிங்கின் வீடு உள்ளது. இங்கு நேற்று டெல்லி காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பப் பிரிவைச் சேர்ந்த போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மணீந்தர் சிங் வீட்டில் 1.5 கிராம் கொகைன் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. சர்வதேச மார்க்கெட்டில் இதன் மதிப்பு ரூ. 5000 ஆகும்.
போலீஸார் மணீந்தர் சிங் வீட்டில் சோதனை நடத்தியபோது அவருடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சய்யாம் சித்திக் என்பவரும் இருந்தார். அவர் போதைப் பொருள் கடத்தல்காரர் மற்றும் வியாபாரி எனக் கூறப்படுகிறது.
போதைப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து மணீந்தர் சிங்கும், நைஜீரிய நாட்டவரும் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் வைத்திருந்ததாக மணீந்தர் சிங் கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.