மண்டப இடிப்பில் உள்நோக்கம்: விஜயகாந்த்
சென்னை: எனது கல்யாண மண்டபத்தை இடித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தின் வளாகத்தில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகம் இருந்தது.
மேம்பாலப் பணிகளுக்காக மண்டபத்தின் முக்கால்வாசிப் பகுதியை அரசு கையகப்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மண்டபத்தை அரசிடம் ஒப்படைத்தார் விஜயகாந்த். இதையடுத்து மண்டபத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மிச்சம் மீதி கிடைத்துள்ள இடத்தில் தேமுதிக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அந்த அலுவலகத்தை விஜயகாந்த் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக அரசு அரசியல் உள்நோக்கத்துடன்தான் திருமண மண்டபத்தை இடித்துள்ளது. மண்டபத்தை இடித்தால் எனது கட்சியின் வளர்ச்சி தடைபடாது.
இது திட்டமிட்ட அரசியல் சதி. அவர்களுடைய இந்த செயலை எதிர்த்து நான் போராட்டம் நடத்த விரும்பவில்லை. ஆகஸ்டு 31ம் தேதி வரை திருமணத்திற்காக மண்டபம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை முடித்துவிட்டு கொடுக்கலாம் என்றிருந்தேன்.
மத்திய தரை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் பாலு, மாற்று வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார். அதனால் மாற்று வழிகுறித்து கூறினோம். ஆனால் அவர்கள் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் 10 மாதங்கள் அமைதியாக இருந்தனர்.
ஏனென்றால் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது தேர்தலில் அனுதாபமாக மாறி எனக்கு வெற்றி கிடைத்துவிடும் என அமைதியாக இருந்துள்ளனர்.
பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த மாற்று திட்டத்தை ரத்து செய்கிறோம் என கூறினர். இது குறித்து நான் நீதிமன்றத்தில் சென்ற போது நீதிபதிகள் அதை ஏற்க மறுத்தனர் என்று கூறினார்.