ஜூன் 15ல் பெங்களூரில் காவிரி பஞ்சாயத்து
பெங்களுரூ:காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழக, கர்நாடகக் குழுவினர் காவிரிப் பஞ்சாயத்து என்ற பெயரில் ஜூன் 15ம் தேதி பெங்களூரில் சந்தித்துப் பேசுகின்றனர்.
தமிழக, கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். காவிரிப் பஞ்சாயத்து என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினையை தீர்ப்பது எப்படி என்று இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. வழி வகைகள் கண்டு அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்க இந்தக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த காவிரி-கிருஷ்ணா போராட்டக் குழு ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் கர்நாடகக் குழுவில் கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா, மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார், திரைப்பட இயக்குநர் நாகத்திஹள்ளி சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இவர்களில் நாராயண கெளடா தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் கடுமையான நிலையைக் கொண்டவர் ஆவர். கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுவதை மிகக் கடுமையாக எதிர்த்து வருபவர். சிவாஜி திரைப்படத்தை திரையிடவும் இவர் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானபோது கன்னட ரக்ஷன வேதிகே காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும் போராட்டத்தில் குதித்தது. தமிழ் செய்தித்தாள்களை தீவைத்து எரித்தும், தமிழ்ப் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்குச் சென்று திரைச் சீலைகளை கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நாராயண கெளடாவும், இக்குழுவில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் சார்பில் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், கோவை விவசாய சங்கத் தலைவர் கணபதி உள்ளிட்டோர் அடங்கிய குழு பங்கேற்கிறது.