பிளஸ் டூ: முதலிடம் பெற்ற மாணவர்களுக்குபரிசு - கல்விச் செலவை அரசு ஏற்றது
சென்னை: பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் கருணாநிதி பரிசுகள் வழங்கினார். அவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும் எனவும் அறிவித்தார்.
பிளஸ் டூவில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு அரசு பரிசு வழங்கிப் பாராட்டி கெளரவித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர்.
முதலிடம் பெற்ற சென்னை டி.ஏ.வி. பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யாவுக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதே பள்ளியைச் சேர்ந்த 2வது இடம் பிடித்த ரூபிகாவுக்கு ரூ. 12 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
3வது இடம் பிடித்த திருப்பூர் ஜெயமோகன், நாமக்கல் நிவேதிதா, ராசிபுரம் இளவரசன், ராசிபுரம் கீர்த்தனா ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த மாணவ, மாணவியரின் உயர் படிப்புக்கான செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரிசுத் தொகை வழங்கிய முதல்வருக்கு மாணவ, மாணவியர் நன்றி தெரிவித்தனர். மாணவி நிவேதிதா, முதல்வருக்கு ராஜாஜி எழுதிய சத்யமேவ ஜெயதே என்ற நூலின் பிரதிகளை அன்பளிப்பாக கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட முதல்வர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவிகள் ரம்யாவும், ரூபிகாவும் பரிசு பெற வந்தபோது கோபாலபுரமா என்று சந்தோஷமா கேட்டார். முதல்வர் வீடு கோபாலபுரத்தில் உள்ளது என்பதால் தனது பகுதியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்ற சந்தோஷத்தில் அப்படிக் கேட்டார் முதல்வர்.