ராமேஸ்வரம் கடலில் போர்க் கப்பல்கள் ரோந்து
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடல் படையின் 6 போர்க் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புலிகளுக்கு விமான பலமும் கூடியுள்ளது. இதையடுத்து இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு வகையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 12 மீனவர்கள் கடத்தப்பட்டதற்கும் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறப்பட்டதால் கடல் பகுதி கண்காணிப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6 அதி நவீன போர்க் கப்பல்கள் ராமேஸ்வரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆள் இல்லாத உளவு விமானங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
24 மணி நேரமும் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது. 6 போர்க் கப்பல்களிலும் 500 கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரோந்துப் பணி குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கும், விசாகப்பட்டனத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கும் அதிகாரிகள் அவ்வப்போது அறிக்கை அனுப்பி வருகின்றனர்.