பார் விபத்து: சாவு எண்ணிக்கை 29 ஆனதுபார் உரிமையாளர் கைது
கோயம்பத்தூர்:திருப்பூர் டாஸ்மாக் மது பார் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆனது.
திருப்பூர் அங்கேரி பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்குப் பின்புறம் பார் உள்ளது. இந்தப் பாரையொட்டி இருந்த கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மது அருந்திக் கொண்டிருந்த 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர்.
இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நேற்று ஒருவர் மரணமடைந்தார். இந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், பார் உரிமையாளர் கந்தசாமியை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் மீது அடிப்படை வசதிகள் இல்லாமல் பார் நடத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இவருக்கு 15 பார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் இன்று கோவை வந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.