அருணாச்சல பிரதேசத்தில் சீனா குசும்பு!
டெல்லி :அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சீன நாட்டு அதிகாரி என்று கூறி அவருக்கு சீனா வர விசா தேவையில்லை என்று சீன தூதரகம் குசும்புத்தனமாக கூறியதால் இந்தியா கோபமடைந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை சீனா ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தையே சீனாவின் ஒரு பகுதி எனவும் சமீப காலமாக கூறத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 107 ஐஏஎஸ் அதிகாரிகளை பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இவர்களில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.
இவர்களுக்கு விசா வழங்குமாறு கோரி சீனத் தூதரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த சீன தூதரகம், அருணாச்சலப் பிரதேச அதிகாரியைத் தவிர மற்றவர்களுக்கு விசா வழங்கியது.
ஒருவருக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை என்று மத்திய அரசின் சார்பில் கேட்டபோது அவர் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்தது. சீனர் ஒருவருக்கு சீனாவுக்கு வர விசா தேவையில்லை என்று குசும்புத்தனமாக பதிலளித்துள்ளாம் சீன தூதரகம்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் போக்கைக் கண்டிக்கும் வகையில் 107 அதிகாரிகளின் சீன பயணத்தையும் ரத்து செய்து விட்டது.