குறுவை சாகுபடிக்கு வழி பிறக்குமா?தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகள்!
தஞ்சாவூர்: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியுமா என்ற கவலையில் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் காத்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சையில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் போதுமானதாக இல்லை. வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
ஆனால் கர்நாடக அரசு முறைப்படி தண்ணீர் வழங்காததால், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையைத் திறக்க முடியவில்லை.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 74.64 அடியாக இருந்தது. அணையின் மொத்த நீர் மட்ட அளவு 120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 795 கன அடி நீரே வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
அணையில் 50 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் அணை திறக்கப்படும். தற்போது 50 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலும் கூட, அணைக்கு போதிய அளவில் நீர் வரத்து இல்லை என்பதால் ஜூன் 12ம் தேதிக்குள் அணையின் நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே போய் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை விரைவில் தொடங்கி வேகம் பிடித்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே தென் மேற்கு பருவ மழை பெய்வதைப் பொறுத்துத்தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதைப் பொறுத்தே அணை திறக்கப்படுவதை எதிர்பார்க்க முடியும் என்பதால் மழைக் கடவுள் வந்து நம் மனதை மகிழ வைக்க வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள்.
கடந்த சில நாட்களாக காவிரிப் பாசனப் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள வவசாயிகள், குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஆழ்துளைக் கிணறு வசதி கொண்டவர்கள் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். மற்றவர்கள் மழைக்காக காத்துள்ளனர்.
காவிரிப் பாசனப் பகுதியில் மொத்தம் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இவை மழையை மட்டுமே நம்பியுள்ள பகுதிகள். மேலும் 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலமும் குறுவை சாகுபடியின் கீழ் வருகிறது.