குவஹாத்தியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
குவஹாத்தி: குவஹாத்தியில் இந்தி பேசுவோர் குடியிருக்கும் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 7 பேர் பலியானார்கள், 15 பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாமில் இந்தி பேசுவோருக்கு எதிராக அங்குள்ள உல்பா தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு உல்பா தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் பெருமளவிலான இந்தி பேசுவோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் குவஹாத்தியின் அத்கோவன் பகுதியில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இப்பகுதியில் இந்தி பேசுவோர் அதிகம் உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அத்கோவன் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பால் அஸ்ஸாமில் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.