ஊட்டி ஓய்வு முடிந்து சென்னை திரும்புகிறார் ஜெ.
சென்னை ஊட்டியில் தோழி சசிகலாவுடன், கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை சென்னை திரும்புகிறார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தோழி சசிகலாவுடன் ஊட்டிக்குச் சென்றார் ஜெயலலிதா. அங்குள்ள கொடநாடு எஸ்டேட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்த எஸ்டேட் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.
கொடநாடு எஸ்டேட் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அந்த வழியாக யாரையும் செல்ல அனுமதிப்பதில்லை, கெடுபிடி செய்கிறார்கள், அரசு அதிகாரிகளையும் தடுக்கிறார்கள் என புகார் எழுந்தது.
இதையடுத்து சமீபத்தில் அரசின் உத்தரவுப்படி அங்கு விசாரணை நடத்த அதிகாரிகள் சென்றனர். ஆனால் எஸ்டேட்டிற்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தனது ஓய்வை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார்.
ரூ. 10,000 கட்டி விண்ணப்பிக்கலாம் ..
இதற்கிடையே, மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரூ. 10,000 கட்டி விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கழகத்தினர் வரும் 28, 29 ஆகிய நாட்களில் தலைமைக் கழகத்தில் காலை 9 மணி முதல் ரூ. 10 ஆயிரம் கட்டி படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.