மதுரை இடைத்தேர்தல்-கட்சிகள் தீவிரம்:வெற்றிக் கனி பறிக்க துடிக்கும் தேமுதிக
மதுரை: மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்வி சண்முகம் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கு அடுத்த மாதம் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் அதிமுகவும், காங்கிரஸும் நேரடிப் போட்டியில் குதிக்கின்றன. தேமுதிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். இதனால் தனது ஊட்டி பயணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரத் திட்டத்தையும அறிவிப்பார் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் சார்பில் இம்முறை யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை போட்டியிட்ட பெருமாள் இம்முறையும் சீட் கேட்டுள்ளார். மேலும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாங்கம், ஐஎன்டியூசி கோவிந்தராஜன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் சீட் கேட்டு வருகின்றனர்.
இவர்களுக்குப் போட்டியாக தேமுதிகவிலும் சீட் கேட்டு பெரும் கூட்டம் காத்திருக்கிறது. கடந்த முறை தேமுதிக சார்பில் போட்டியிட்ட மணிமாறன் இந்த முறையும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோரது பெயரும் பலமாக அடிபடுகிறது.
மதுரை மேற்கில் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும் என விஜயகாந்த்தும் தீவிரமாக உள்ளார். இடைத் தேர்தலுக்காக 20 நாட்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிரப் பிரசாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
விண்ணப்பங்கள் வரவேற்பு<:>
இதற்கிடையே, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என கட்சி பொருளாளர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட விரும்பும் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை முதல் 30ம் தேதி வரை, மதுரை மேல ஆவணி மூல வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ரூ. 10 ஆயிரம் பணம் கட்டி விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31ம் தேதிக்குள் மதுரை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.