எம்.பி. ஆகிறார் கருணாநிதி மகள் கனிமொழி
சென்னை:ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள், கவிஞர் கனிமொழிக்கும், திருச்சி சிவாவுக்கும் சீட் தரப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நேற்று மாலை முதல்வர் கருணாநிதி தலைமையில், அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் அரங்கில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை செய்தியாளர்களிடம் வாசித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஜூன் 15ம் தேதி நடைபெறவிருக்கிற மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் நமது கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளருக்கும் ஆதரவு தருவது என்பதோடு, திமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்சி என்.சிவா, கவிஞர் கனிமொழி ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவதென ஒரு மனதாக உயர் நிலை செயல் திட்டக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது என்றார் கருணாநிதி.
திருச்சி சிவா ஏற்கனவே எம்.பியாக இருந்தவர், திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருக்கிறார். கனிமொழி முதல் முறையாக எம்.பி. ஆகிறார். மத்திய அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.