அச்சுதானந்தனுக்கு அதிர்ச்சி வைத்தியம்!
டெல்லி:கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பினரயி விஜயன் ஆகியோரை பொலிட்பீரோ உறுப்பினர் பதவியிலிருந்து கட்சி மேலிடம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அச்சுதானந்தனும், பினரயி விஜயனும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். அச்சுதானந்தன் முதல்வர் பொறுப்புக்கு வராமல் தடுக்க பினரயி விஜயன் கடுமையாக முயற்சித்தார். ஆனால் அதை மீறி அச்சுதானந்தன் முதல்வர் ஆனார்.
இதனால் அச்சுதானந்தன் மீதான விஜயனின் துவேஷம் அதிகரித்தது. தொடர்ந்து அச்சுதானந்தன் அரசின் பல கொள்கை முடிவுகளை விமர்சித்து வந்தார். சமீப காலமாக இருவரும் பகிரங்கமாக பத்திரிகைகள் மூலமாகவும், டிவிகள் மூலமாகவும் கடுமையாக குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தனர்.
இந்த இரு தலைவர்களின் போக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து விவாதிக்க பொலிட்பீரோ கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு விஜயனும், அச்சுதானந்தனும் அழைக்கப்பட்டனர்.
கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் திட்டி கோஷமிட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிடம் மேலும் அதிர்ச்சி அடைந்தது.
இரு தலைவர்களும் கட்சியின் கட்டுப்பாட்டுக்கும், ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிட்பீரோ முடிவு செய்தது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கட்சியின் மூத்த தலைவர்களான அச்சுதானந்தனும், பினரயி விஜயனும் பரஸ்பரம் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை பரிமாறிக் கொண்டது கட்சியின் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் மீறும் செயலாகும்.
மூத்த தலைவர்களே இதுபோல நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது என்பதால் இருவரையும் பொலிட்பீரோ உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு மத்திய குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். இருவரது பிற கட்சிப் பதவிகளில், பொறுப்புகளில் மாற்றம் ஏதும் இல்லை. இனிமேல் பகிரங்கமாக, இருவரும் எந்தவித புகார் கூறும் செயலிலும், குற்றச்சாட்டுக்களை எழுப்பும் வேலையில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் காரத்.