சிறையில் கைதிகள் மோதல்-2 பேர் காயம்
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புழல் சிறையில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்த கும்பலும், கொள்ளைக் கும்பல் ஒன்றும் அருகருகே இருந்த அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில், பர்மா சீனு, அவருடைய மகன் பாலு என்கிற பாபா சுரேஷ், முத்தையா, தபக் சுரேஷ், டில்லி பாபு, சொறி பாலு ஆகியோர் வழக்கு தொடர்பான வீடியோ கான்பரன்சிங் விசாரணை முடிந்து தங்களது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கும் இன்னொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். கையில் கிடைத்த பொருட்களால் இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
இந்த மோதலில் பர்மா சீனுவுக்கும், சொறி பாலுவுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் வட சென்னையை சேர்ந்தவர்கள். சீனுவின் மனைவி லட்சுமிதான் தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என கருதிய கொள்ளை கும்பல் இவர்களை தாக்கியதாக தெரிகிறது.
மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.